top of page

Narayaneente Moonnaanmakkal (நாராயணியின் மூன்று மகன்கள்)

Updated: May 15




கையில் குழந்தையோடு இருக்கும் மனைவி, கல்லூரி படிக்கும் மகனோடு ஆஸ்பத்திரிக்குள் பாஸ்கர் வருகிறான்.  அவனது மூத்த அண்ணன் விஸ்வநாதனும், இரண்டாவது அண்ணன் சேதுவும், அங்கு இருக்கிறார்கள். ஐ.சி.யூவில் இருக்கும் அம்மாவைப் பற்றி விசாரித்து விட்டு, தன் மனைவியையும், மகனையும் தன் அண்ணன்களுக்கு பாஸ்கர் அறிமுகம் செய்கிறான். பட்டும் படாமல் அவர்கள் இணக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். கையில் இருக்கும் குழந்தைக்கு என்ன பேர் என்று விஸ்வநாதனின் மனைவி, பாஸ்கரின் மனைவியிடம் கேட்கிறாள்.

 

அம்மாவை தன் அண்ணனும், தம்பியும் இறுதியாய் பார்த்து விடட்டும் என ஊரில் இருக்கும் சேது அழைத்திருக்கிறான். உடலில் எந்த அசைவும் இல்லாமல் இருக்கும் அம்மாவுக்கு சிகிச்சையினால் பலன் இல்லை எனத் தெரிகிறது. ஆஸ்பத்திரியில் இருப்பதை விட அம்மா இறுதி நாட்களில் வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு செய்யப்படுகிறது.  சின்ன வயதில் ஒன்றாய் வாழ்ந்த வீட்டில்  இருபது வருடங்களுக்கு பிறகு  அண்ணன் தம்பிகள் கூடி சில நாட்கள் இருக்க வேண்டியது இருக்கிறது.  

 

அம்மா இருக்கும் அறையில் அந்த பழைய டிரான்சிஸ்டரை பாஸ்கர் பார்க்கிறான். ஆசையாய் எடுத்து டியூன் செய்கிறான்.  பிடித்தமான பாடல் ஒன்றை முணுமுணுக்கிறான். அதை பார்த்துக் கொண்டிருக்கும் சேது வெளித் தெரியாத ஒரு புன்னகையோடு “இப்பத்தான் யூடியுபில் கேட்கலாமே” என்கிறான்.  “இந்த டிரான்சிஸ்டரில் கேட்டது போல் இருக்குமா?” என்கிறான் பாஸ்கர்.

 

சமையலறையில். விஸ்வநாதன் மனைவி பாஸ்கரின் மனைவியைப் பார்த்து ”அவர்கள் மூவரும் பார்ட்டி ஆரம்பித்து விட்டார்கள்” என்கிறாள். ”அப்படியா” என்கிறாள் அவள். அடுத்து “நீ குடிப்பியோ”  கேட்கிறாள். அவள் சாதாரணமாக, “ஆமாம்” என்கிறாள். “உன் மதத்துக்கு புறம்பானதில்லையா?” என்கிறாள். பதில் சொல்லாமல் மெல்ல பேச்சை மாற்றுகிறாள் பாஸ்கரின் மனைவி.

 

விஸ்வநாதன் மகள் ஆதிராவும் பாஸ்கரின் மகன் நிகிலும்  ஒருவருக்கொருவர் தயங்கித் தயங்கி அவர்களாகவே அறிமுகமாகிக் கொள்கிறார்கள். “உன் தங்கைக்கும், உனக்கும் எவ்வளவு வயது வித்தியாசம்?’ என கேட்கிறாள் அவள். “பதினெட்டு வருசம்” என்று லேசாய் சிரிக்கிறான் அவன்.

 

படத்தின் ஆரம்பத்தில் வரும் இந்த சில காட்சிகளிலேயே அந்த குடும்ப உறவுகளை புரிந்து கொள்வதோடு அந்த உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களையும் பார்வையாளர்கள் உணர ஆரம்பிக்கிறார்கள். பாஸ்கர் வீட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்றது, ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் சேது கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது,  இந்த சூழலில் குடும்பத்தின் சொத்துக்கள் மீது தன் உரிமையை நிலைநாட்ட விஸ்வநாதன் ஆசைப்படுவது, தங்கள் வேலைகளை விட்டு விட்டு அந்த வீட்டிலேயே அம்மா இறக்கும் வரைக்கும் எத்தனை நாட்கள் இருப்பது என உறவுச் சிக்கல்கள் ஒவ்வொன்றாய் பிடிபட கேள்விகளும், புதிர்களும் தன் போக்கில் விரிகின்றன. அசையாமல் இருக்கும் அம்மாவைச் சுற்றி மூன்று மகன்களின் உரையாடல்களும், நடமாட்டங்களும் அமைதியற்றுப் போகின்றன.

 

வீட்டின் கீழ் தளத்தில் நடப்பவைகள் எதனோடும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையாய் இருக்கும் ஆதிராவும், நிகிலும் மேல்தளத்தில் தங்கள் உலகில் சஞ்சரிக்கிறார்கள். அந்த ஊரின் அழகையும் பொழுதுகளையும் ரசிக்கிறார்கள்.  அவர்களை இணைத்துக் கொண்டு பயணிக்கும் போது கதையின் தளமும் உயர்ந்து விடுகிறது.

 

அம்மா இறந்து போகும் முன்பே பாஸ்கரின் குடும்பம் அந்த வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது.. நிகில் அருகில் சேது வந்து, “போய் ஆதிராவிடம் சொல்லி விட்டு வா” என்கிறான். வேண்டாம் என்பது போல் பாஸ்கர் பார்க்கிறான். “விடு. சொல்லிட்டு வரட்டும்” என்கிறான் சேது. அப்போது ஆதிராவும், நிகிலும் பேசிக்கொள்ளும் காட்சி பார்வையாளர்களை கரையச் செய்து விடும். வாழ்வை, மனித உறவுகளை, காலத்தை எல்லாம் அழகாக்கி விடும் இடம் அது.

 

உரையாடல்களும், காட்சிகளும் நிதானமாய், அர்த்தபூர்வமாய் இருக்கின்றன. சிறப்பான ஓளிப்பதிவு அனைவரும்  மிக இயல்பாய் நடித்திருக்கிறார்கள். விஸ்வநாதனாக அலென்சியரும், சேதுவாக ஜோஜு ஜார்ஜும், பாஸ்கராக சுராஜும் நாராயணியின் மூன்று மகன்களாக ( Narayaneente Moonnaanmakkal) மனதில் நிற்கிறார்கள்.

 

படம் கவிதையாய் மிக இயல்பாய் நகர்கிறது. படம் முழுவதும் ரசிப்பதற்கு அவ்வளவு காட்சிகள் இருக்கின்றன.  


படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

댓글


Subscribe செய்யுங்கள். தொடர்பிலிருப்போம்!

bottom of page