எரியும் வீடுகள்
- மாதவராஜ்
- May 8
- 1 min read

அந்த வீட்டில் நெருப்பை வைத்தான் ஒருவன்.
நெருப்பை வைத்தவன் அங்குதான் இருக்கிறான் என அடுத்த வீட்டிற்கு நெருப்பை வைத்தான் அந்த வீட்டுக்காரன்.
அந்த வீட்டுக்காரனும் அடுத்த வீட்டுக்காரனும் அடுத்தடுத்து
நெருப்பை வைத்துக் கொண்டார்கள்.
அந்த வீட்டில் நெருப்பு படருவதை அடுத்த வீட்டில் சிலர் கொண்டாடினார்கள்.
அடுத்த வீட்டில் நெருப்பு படருவதை அந்த வீட்டில் சிலர் கொண்டாடினார்கள்.
”நம் வீடும் எரிகிறது. சாம்பலாகிவிடுவோம். முதலில் நீரை ஊற்றி அணைப்போம்” என்று அந்தந்த வீடுகளில் பலர் எச்சரித்தார்கள்.
இரண்டு வீடுகளிலும் நீரை ஊற்றச் சொன்னவர்களை நெருப்பை வைத்தவர்கள் துரோகிகள் என்றார்கள்.
இரண்டு வீடுகளும் சேர்ந்து எரிந்து கொண்டு இருக்கின்றன.
Commentaires