Thug life - குண்டர்கள் கதை
- மாதவராஜ்
- Jun 7
- 3 min read

வருகிறார்கள். சுடுகிறார்கள். வெட்டுகிறார்கள். செத்துப் போகிறார்கள். கமல், நாசர், த்ரிஷா, சிம்பு, ஜோஜூ, அசோக்செல்வன், அபிராமி, ஐஸ்வரியா லஷ்மி, அலி ஃபாசில் என ஏகத்துக்கும் நடிகர்களை புக் செய்துவிட்டு யாரை என்ன செய்வது என்று தெரியாமல் இஷ்டத்துக்கு ஒவ்வொருவராய் இயக்குனர் போட்டுத் தள்ள ஆரம்பித்திருக்க வேண்டும். Thug deaths!
கமல் மட்டும் விதிவிலக்கு. காரை வைத்து மோதுகிறார்கள். வெட்டுகிறார்கள். சுடுகிறார்கள். இமயமலையிலிருந்து அதல பாதாளத்தில் தள்ளி விடுகிறார்கள். பனிச்சரிவில் சிக்கிக் கொள்கிறார். ம்ஹூம். எழுந்து வருகிறார். கடைசி வரைக்கும் சாகாமல் புலம்பிக்கொண்டு இருக்கிறார். அப்பாடா என சீட்டைவிட்டு எழுந்திருக்கும்போது விண்வெளி நாயகா என்று ஹைபிச்சில் பாட்டு ஒலித்து திடுக்கிட வைக்கிறது. சில கணங்களில் தியேட்டரில் விளக்குகள் போடப்பட்டு சப்த நாடியும் அடங்கி விடுகிறது வெள்ளித் திரை.
வெளியே வரும்போது ஒருவர் அவர் அருகில் சென்று கொண்டிருந்த பையனிடம் தக் என்றால் குண்டர் என்று அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார். சட்டென வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
படத்தில் ஒன்றும் புதுசாக இல்லை. ஒன்றும் எதிர்பாராததாய் இல்லை. வசனங்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. எந்த பாத்திரமும் அதற்கென ஒரு பிரத்யேகத் தன்மையோடு நினைவில் நிற்கவில்லை. லாஜிக்கும் இல்லை. பார்வையாளர்களோடு காட்சிகள் ஒட்டவே இல்லை. அயர்ச்சியான அனுபவம். எதிர்பார்த்ததை விடவும் படம் மோசமாய் இருந்தது. இந்த குப்பைக் கோட்டையை வைத்துக் கொண்டா கோடிகளின் கோட்டை கட்டுகிறார்கள்?
27 வருடங்களுக்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இணைகிறார்கள் என்று ஆரம்பித்தார்கள். மணிரத்னம் காலி டப்பாவாகி ரொம்ப காலமாகியிருந்தது. கமல்ஹாசனோ போன ஜென்மத்தில் நல்ல கதையொன்றில் நடித்தது போலிருந்தது. கரம் மசாலா விக்ரம் தந்த வசூலில் விஸ்வரூபம் எடுத்தவராய் தன்னைக் கருதிக்கொண்டு இந்தியன் இரண்டில் படுபாதாளத்தில் விழுந்தார். துடைத்துக் கொண்டு என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் தக் லைஃபில் வந்து அலைகிறார். பரிதாபமான காட்சி.
ஒரு தெளிவான ஸ்கிரிப்ட்டை வைத்து திட்டமிட்டு படம் எடுத்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. வந்தவர்கள் போனவர்கள் என்று அவரவர்கள் எதோ செய்திருக்கிறார்கள். ஒரு ஷோவில் தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் படத்தின் பாடல்கள் பற்றிக் கேட்டார். எப்போதும் யாரையும் பேச விடாமல் தான் மட்டுமே பேசுகிற கமல்ஹாசன் திருதிருவென முழித்து ”இன்னும் முழுசா கேட்வில்லை. துண்டு துண்டாக கேட்டிருக்கிறேன், அவரிடம் கேளுங்கள் என்று பந்தை மணிரத்னத்திடம் தள்ளிவிட்டார். சாதாரண நேரத்திலேயே எதுவும் பேசாத மணிரத்னம் ”சீக்கிரம் ரெடியாகி விடும்” என்பதாய் முணுமுணுத்துவிட்டு பந்தை ரஹ்மானிடம் தள்ளிவிட்டார். ஏ.ஆர்.ஆரோ விரைவில் முடிந்துவிடும் என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். பிரமாதமான ஒருங்கிணைப்பு!
அவர்கள் பேசாத அந்தப் பாடல்களில் சில அற்புதமானவையாக இருந்தன. படத்தில் இடம்பெறவில்லை. அவ்வளவு அழகான முத்த மழை பாட்டை எப்படியும் மணிரத்னம் காட்சிகளாக்கி காலி செய்திருப்பார் என்று நினைத்திருந்தேன். அவரோ படத்திலேயே இடம் பெறாமல் காலி செய்திருக்கிறார். நல்லது. படத்தின் இயக்குனராக அவர் செய்த ஒரே நல்ல காரியம் அதுதான். எந்த இடத்தில் பாடலை இணைப்பார்கள் என்று நினைத்தாலே குமட்டிக் கொண்டு வருகிறது. இந்த படம் பற்றிய சில துணுக்குகளை எதிர்காலத்துக்கு சேகரித்து கொடுப்பவை ஒருவேளை அந்தப் பாடல்களாக இருக்கலாம்.
தமிழில் வடசென்னைதான் தக் லைஃப் பற்றி பேசிய படமாகத் தெரிகிறது. அதன் பக்கத்தில் வைத்து பார்ப்பதற்குக் கூட அருகதையற்ற படம் இது. இப்பேர்ப்பட்ட ஒரு குப்பையை மடி நிறைய வைத்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் கூச்ச நாச்சமே இல்லாமல் எவ்வளவு கூவினார்கள்? பிரமோஷன் என கூடிக் கூடி எவ்வளவு ஷோ காட்டினார்கள். உலக நாயகன் நீட்டி முழக்கியது, பீற்றியது எல்லாம் கொஞ்ச நஞ்சமா? சினிமா உலகில் ஜீனியஸ் என அறிவித்துக் கொண்டவர்கள் செய்யும் காரியமா இது? எதைப் போட்டாலும் பார்வையாளர்கள், ரசிகர்களாகிய மக்கள் வாலாட்டிக்கொண்டு இருப்பார்கள் என்ற எண்ணம்தான் அவர்களின் அடி மனதில் இருக்க வேண்டும். அதிர்ச்சியாய் இருக்கிறது.
சினிமா என்னும் மகத்தான கலை சாதனத்தை வணிக உலகம் கரையானாய் அரித்துக் கொண்டிருக்கிறது. பான் இண்டியா என்று இந்திய சினிமா செல்லும் திசை ஆபத்தானதாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. தங்கள் சந்தையை விரிவாக்கி பணத்தை அள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த நோக்கமும் இருக்கவில்லை. அது நாசகர விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன. அந்தந்த மொழி, பிரதேசங்களின் பன்முகத்தன்மையும், தனித்தன்மையும் மிக்க மக்களின் வாழ்வை காட்சிப்படுத்தாமல் ஒன்று போல் வன்மம், வெறிக்கூச்சல், சிதறும் மனித உடல்கள் என ரத்தம் தெறிக்கும் காட்சிகளையே கொண்டிருக்கின்றன. ’பான் இண்டியா’வே ஒரு தக் லைஃப்தான்.
தமிழில் சமீபத்தில் வந்த படங்களைப் பாருங்களேன். குட் பேட் அக்லி, ரெட்ரோ, வீர தீர சூரன், தக் லைஃப் எல்லாம் ஒரே வகையிலானவை. ’பான் இண்டியா’ தோல்விகள். லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் மக்களின் வரவேற்பை பெறுவதும் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது. கதையும், படம் பார்வையாளர்களுக்கு கடத்தும் உணர்வில் இருக்கும் தெளிவும் அந்தப் படங்களை பிரமோஷன் அலப்பறைகள் இல்லாமலேயே வெற்றியடைய வைத்திருக்கின்றன.
கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் நடித்த பல காட்சிகள் நினைவுகளில் நிலைத்திருக்கின்றன. அலைக்கழிக்கும் உணர்வுகளுக்கு ஆளாக்கி இருக்கின்றன. ஆனால் அவர் ஒரு நல்ல கலைஞரா என்று கேட்டால் இல்லை என்றே தோன்றுகிறது. தனது கலைக்கு நியாயம் செய்கிறவனே கலைஞன். தனது கலையின் அர்த்தத்தை அறிந்து காலமெல்லாம் அதனை நீடிக்கச் செய்யும் துடிப்பு மிக்கவனே கலைஞன். அந்தக் கலை வழியே மக்களுக்கு அந்த கலைஞன் என்ன சொல்கிறான் என்பது முக்கியம். ஐந்தாறு வயதிலிருந்து சினிமாவோடு தன் வாழ்வை இணைத்துக் கொண்டு விட்ட கமல் சினிமா என்னும் மகத்தான கலை சாதனத்தை எப்படி அணுகி வந்திருக்கிறார் என்பதை காலம் பார்த்தும், பதிந்தும் வைத்திருக்கிறது. தமிழ் சினிமா புதிய திசைகளில் பயணிக்க முயற்சிக்கும் தருணங்களில் அதை மடை மாற்றிய பெருமை கமலைச் சாரும். சகல கலா வல்லவனில் இருந்து விக்ரம் வரை அந்தக் கதை தொடர்கிறது.
முற்போக்காய் தன்னைக் காட்டிக் கொண்டாலும் தனது படங்களில் அங்கங்கு கமல் தூவிய விஷங்கள் ஒரு தனி டிராக். இந்தப் படத்திலும் வருகிறது. அண்ணன் தம்பிகள், அப்பன் மகன் சண்டையைப் பற்றி சொல்லும்போது, “இது டெல்லியின் சாபம். முகலாயர்கள் காலத்திலிருந்து வருகிறது” என போகிற போக்கில் சொல்கிறார். அதற்கு முன்பு இங்கு அன்பும், அமைதியும் பாலாறாய் ஓடிக்கொண்டா இருந்தது. உலகநாயகரே! அந்தச் சண்டைகள் எல்லாம் முஸ்லீம் மதம் தோன்றுவதற்கு முன்பு, இதிகாச காலத்திலிருந்தே வாளோடு முன் தோன்றி இருக்கிறது.
தக் லைஃப் படத்தின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. கொஞ்சம் நம்பிக்கை தருகிறது. நல்ல கதையோடு, ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் எளிமையான படங்கள் நிறைய வரவேண்டும் என்பதன்றி வேறொன்றும் ஆசையில்லை பராபரமே!
மன்னிப்பு கேட்க வேண்டியது கமலா மணியா
சூப்பர் தோழர்... வாழ்த்துக்கள்... தற்போது எல்லா படங்களும் அடிதடி சண்டை ஒன்றும் புரியாத வசனம்..ஒலி அமைப்பு என்று தான் உள்ளது... ஒரு சில நல்ல படங்களை சசிகுமார் போன்ற ஒரு சிலர் தருகின்றனர்..உலக நாயகன் என்பதால் இது கார்ப்பரேட் உருட்டு மட்டுமே என்று தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி தோழர்
நல்ல வேலை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்...! நன்றி!
-பொன்ராஜ்.